Saturday, December 7, 2019

† புனிதர் அம்புரோஸ் † (டிசம்பர் 7)



† இன்றைய புனிதர் †
(டிசம்பர் 7)

✠ புனிதர் அம்புரோஸ் ✠
(St. Ambrose)

மிலன் நகரின் பேராயர்/ திருச்சபையின் மறைவல்லுநர்:
(Archbishop of Milan/ Doctors of the Church)

பிறப்பு: கி.பி. 340
ஆகஸ்ட்டா ட்ரெவெரோரும், கல்லியா பெல்ஜிகா, ரோம பேரரசு (தற்போதைய டிரையர், ஜெர்மனி)
(Augusta Treverorum, Gallia Belgica, Roman Empire (Modern Trier, Germany)

இறப்பு: ஏப்ரல் 4, 397
மெடியோலனும், இடாலியா அன்நோனரியா, ரோம பேரரசு
(தற்போதைய மிலன், இத்தாலி)
(Mediolanum, Italia annonaria, Roman Empire (Modern Milan, Italy)

நினைவுத் திருவிழா: டிசம்பர் 7

ஏற்கும் சபை:
கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)
ஆங்கிலிக்கன் சமூகம்
(Anglican Communion)
லூதரன் திருச்சபை
(Lutheran Church)
ஓரியண்டல் மரபுவழி திருச்சபை
(Oriental Orthodoxy)

சித்தரிக்கும் வகைகள் :
தேன் கூடு, குழந்தைகள், சாட்டை, எலும்புகள்

பாதுகாவல்:
தேனீ வளர்ப்பு; தேனீக்கள்; மெழுகுவர்த்தி தயாரிப்பாளர்கள்; வீட்டு விலங்குகள்; கற்றல்; மிலன்; மாணவர்கள்; ஆயர்கள்; வாத்துக்கள்; கால்நடை; காவல் அதிகாரிகள்; மெழுகு சுத்திகரிப்பாளர்கள்;

முக்கிய திருத்தலங்கள்:
அம்புரோசு பேராலயம்
(Basilica of Sant'Ambrogio)

“ஆரேலியஸ் அம்புரோசியஸ்” (Aurelius Ambrosius) என்னும் இயற்பெயருடைய புனிதர் அம்புரோஸ், “மிலன் நகரின் கத்தோலிக்க பேராயரும்” (Archbishop of Milan), கி.பி. நான்காம் நூற்றாண்டின் திருச்சபை தலைவர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவரும் ஆவார். இவர் பேராயராகும் முன்னர், வடமேற்கு இத்தாலியின் கடற்கரைப் பிராந்தியமான “லிகுரியா” (Liguria) மற்றும் வட இத்தாலியின் சரித்திர பிராந்தியமான “எமிலியா” (Emilia) ஆகியவற்றின் “ரோமன் ஆளுநராக” (Roman governor) பதவியேற்றிருந்தார். மிலன் நகர் இவரது தலைமையிடமாக இருந்தது.
திருச்சபையின் முதல் நான்கு அசல் “மறைவல்லுநர்களுள்” (Doctors of the Church) இவரும் ஒருவர். இவர் மிலன் நகரின் பாதுகாவலர் ஆவார். அகுஸ்தீனுக்கு இவரால் ஏற்பட்ட தாக்கத்துக்காக இவர் பெரிதும் அறியப்படுகின்றார்.

இவர் பல விவிலிய விளக்க உரைகளை எழுதியுள்ளார். இவற்றில் இவரின் வாழ்கை குறித்த செய்திகள் பல காணக் கிடைக்கின்றன. இவரின் முன்னோர்கள் ரோமக்குடிமக்களாகவும், தொடக்கத்திலேயே கிறிஸ்தவ மறையினை தழுவியவர்களாகவும், அரசின் உயர் அதிகாரிகளாகவும் கிறிஸ்தவ மறைசாட்சிகளாகவும் இருந்துள்ளனர். “ஔரெலியஸ் அம்ப்ரோசியஸ்” (Aurelius Ambrosius) எனும் பெயரால் அறியப்படும் இவரது தந்தை, ரோமப்பேரரசின் “கௌல்” பிராந்தியத்தின் (Praetorian prefecture of Gaul) ஆளுநராக இருந்தார். இப்பதவி ரோமக்குடிமக்கள் வகிக்கக்கூடிய மிக உயரிய பதவி ஆகும்.

இவரது மூத்த சகோதரியான “மார்செல்லினா” (Marcellina) மற்றும் சகோதரர் “சாடிரஸ்” (Satyrus of Milan) ஆகிய இருவருமே புனிதர்களாவர். இவரது குழந்தைப்பருவத்தில் ஒருநாள் இவர் தொட்டிலில் படுத்திருக்கையில், தேனீக்களின் கூட்டமொன்று இவருடைய முகத்தைச் சூழ்ந்து மூடிக்கொண்டதாகவும், அவருடைய முகத்தில் ஒருதுளி தேனை விட்டுச் சென்றதாகவும் கூறப்படுகிறது. இதனைக் கண்ட இவரது தந்தையார், இக்குழந்தை எதிர்காலத்தில் இனிமையாகவும் எளிமையாகவும் பேசக்கூடிய நாவன்மை கொண்டதாக வளருவதற்கான இது ஒரு அறிகுறியாகும் என்று குழந்தையின் தந்தை எண்ணினார்.

இவரது தந்தையின் மரணத்தின் பின்பு இவரின் குடும்பம் ரோமில் குடியேறியது. இலக்கியம், சட்டம், சொல்லாட்சி ஆகியவற்றைக் கற்ற இவரை, நான்காம் நூற்றாண்டின் பிற்பகுதியில், செல்வம், அதிகாரம் மற்றும் சமூக தொடர்புகளுக்கு புகழ்பெற்ற ரோமானிய உயர்குடித் தலைவரான “செக்ஸ்டஸ் கிளாடியஸ் பெட்ரோனியஸ் ப்ரோபஸ்” (Sextus Claudius Petronius Probus) என்பவரும், பிறிதொரு உயர் அதிகாரியும் (Praetorian Prefect) இணைந்து, முதலில் அரசவையில் (Council) அதிகாரமிக்க பதவியளித்தனர். பின்னர், 372ம் ஆண்டில் இவரை “லிகுரியா” (Liguria) மற்றும், “எமிலியா” (Emilia) ஆகிய பிராந்தியங்களின் “ரோமன் ஆளுநராக” (Roman governor) நியமித்தனர். இப்பிராந்தியங்களின் தலைமையகமாக மிலன் இருந்தது. இதுவே அக்காலத்தில் இத்தாலியின் இரண்டாம் தலைநகராக கருதப்பட்டது.

அரசியலில் மிகவும் பிரபலமான நபராக அம்புரோஸ் கருதப்பட்டார். ரோமப்பேரரசன் (Roman emperor) “முதலாம் வலேண்டினிய’னுடைய” (Valentinian I) அரசவையில் இவர் மதிப்புமிக்கவராக இருந்த அம்புரோஸ் எப்போதும் திருமணம் செய்துகொண்டது கிடையாது.

கி.பி. 374ம் ஆண்டு, மிலன் மறைமாவட்டத்தில் (Diocese of Milan) அப்போதைய ஆரியனிச ஆயர் “ஆக்சென்ஷியஸ்” (Auxentius) என்பவர் இறந்தார். அப்போது அடுத்து அப்பதவியினை ஏற்கப்போவது யார் என்பது குறித்து ஆரியனிச (Arians) கொள்கை உடையவர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் (Nicene Christianity) இடையே பெரும் சிக்கல் உருவானது. அரச ஆளுநரான அம்புரோஸ், கலகம் ஏற்படாதிருக்க இரு தரப்பினருக்கிடையே அமைதி ஏற்படுத்த முனைந்தார். ஆனால் இப்பேச்சுவார்த்தையின்போது அனைவராலும் அம்புரோஸ் ஆயராக தேர்வு செய்யப்பட்டார்.

ஆயராக விரும்பாததால் ஓடி ஒளிந்த அம்புரோஸ், பேரரசர் கிரேஷியன் (Emperor Gratian) கடிதம் கொடுத்து அனுப்பிய காரணத்தால், வேறு வழியின்றி ஆயர் பதவியினை ஏற்றார். அப்போது அவர் திருமுழுக்குகூட பெற்றிருக்கவில்லை என்பதும் திருமுழுக்கு பெற ஆயத்தம் செய்து கொண்டிருந்தார் என்பதுவும் குறிக்கத்தக்கது. திருமுழுக்கு பெற்று, குருத்துவம் பெற்று, எட்டு நாட்களுக்குப்பின் கி.பி. 374ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 7ம் நாள், ஆயர்நிலை திருப்பொழிவு பெற்றார். இரண்டே ஆண்டுகள் ஆளுநராக பதவி வகித்த அம்புரோஸ், கி.பி. 374ம் ஆண்டு, மிலன் நகரின் ஆயராக நியமிக்கப்பட்டார். இன்னாளிலேயே கிழக்கு மற்றும் மேற்கு கிறிஸ்தவ பிரிவுகள் இவரின் விழா நாளை கொண்டாடுகின்றனர்.

ஆயராகப் பதவியேற்றதுமே சட்டென தம்மை ஆன்மீக வாழ்வுக்கு மாற்றிக்கொண்ட அம்புரோஸ், அவரிடமிருந்த பணத்தை ஏழைகளுக்கு வழங்கினார். அவரது நிலம் அனைத்தையும் நன்கொடையாக வழங்கினார். தமது மூத்த சகோதரி “மார்செல்லினாவுக்கு” (Marcellina) வேண்டியதை மட்டுமே விட்டுவைத்தார். (ஆனால், பின்னர் அவரும் அருட்சகோதரியாக துறவறம் பெற்றார்). குடும்பப் பொறுப்புகளை சகோதரர் “சாடிரஸ்” (Satyrus of Milan) ஏற்றுக்கொண்டார். இதனால், அவருடைய செல்வாக்கு இன்னும் அதிகரித்தது. பேரரசருக்கும் அவர்மீது கணிசமான அரசியல் செல்வாக்கு இருந்தது. அம்புரோஸ், “மரணத்தின் நன்மை” (The Goodness of Death) என்றோர் ஆய்வுக் கட்டுரை எழுதினர்.

அம்புரோஸ், மிலன் மறைமாவட்டத்தில் ஆரியனிச (Arianism) செயல்பாடுகளை வலுக்கட்டாயமாக நிறுத்தினார். அக்காலத்தில், மேற்குலகில் அரிதாக இருந்த கிரேக்க மொழியில் தமக்கிருந்த மிகுந்த அறிவைப் பயன்படுத்தி, தமது அனுகூலத்திற்காக பழைய ஏற்பாட்டினை படித்தார். இவ்வறிவை பிரசங்கங்கள் செய்வதற்கு உபயோகப்படுத்தினார். குறிப்பாக பழைய ஏற்பாட்டின் வெளிப்பாடுகளில் விசேட கவனம் செலுத்தினார். அவரது சொல்லாட்சி திறன், அதுவரை கிறிஸ்தவ பிரசங்கிகளை மோசமாக எண்ணியிருந்த அகுஸ்தினாரை (Augustine of Hippo) கவர்ந்தது.

ஆயராக அரும்பணிகள் பல செய்துள்ள இவரது மறையுரைகள் மற்றும் விவிலிய விளக்க உரைகள் இன்றளவும் பயன்படுகின்றன. கி.பி. 387ம் ஆண்டு, உயிர்த்தெழுந்த திருவிழாவன்று புனிதர் அகுஸ்தீனுக்கு திருமுழுக்கு அளித்தவர் இவரேயாவார். இவரை அகுஸ்தீன், தன்வரலாற்று நூலில் போற்றி குறிப்பிட்டுள்ளார். ஆரியனிச பதிதக் கொள்கையினை இவர் சீராக்க பாடுபட்டார்.

கி.பி. 397ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 4ம் தேதி மரித்த இவரது உடல், மிலன் நகரிலுள்ள “அம்புரோஸ் பேராலயத்தில்” (Church of Saint Ambrogio) பாதுகாக்கப்பட்டு வருகின்றது.

No comments:

Post a Comment