Tuesday, December 31, 2019

† புனிதர் முதலாம் சில்வெஸ்டர் † (டிசம்பர் 31)



† இன்றைய புனிதர் †
(டிசம்பர் 31)

✠ புனிதர் முதலாம் சில்வெஸ்டர் ✠
(St. Sylvester I)

33ம் திருத்தந்தை:
(33rd Pope)

பிறப்பு: ----
சாந்தாஞ்சலோ ஆ ஸ்காலா, அவெல்லீனோ
(Sant'Angelo a Scala, Avellino)

இறப்பு: டிசம்பர் 31, 335
ரோம், இத்தாலி
(Rome, Italy)

நினைவுத் திருவிழா: டிசம்பர் 31

திருத்தந்தை முதலாம் சில்வெஸ்டர் (Pope Sylvester I) ரோம் ஆயராகவும் திருத்தந்தையாகவும் கி.பி. 314ம் ஆண்டு, ஜனவரி மாதம், 31ம் நாளிலிருந்து கி.பி. 335ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 31ம் நாள் வரை திருப்பணி செய்தார். இவருக்கு முன் ஆட்சியிலிருந்தவர் திருத்தந்தை “மில்டியாட்ஸ்” (Pope Miltiades) ஆவார். திருத்தந்தை முதலாம் சில்வெஸ்டர் கத்தோலிக்க திருச்சபையின் 33ம் திருத்தந்தை ஆவார்.

இத்திருத்தந்தையின் திருப்பணிக் காலத்தில் ரோம் நகரில் பேரரசன் காண்ஸ்டண்டைன் (Constantine) வலிமை மிக்கவராக விளங்கினார். அவர்களின் ஆட்சியின்போது ரோம் நகரில் தலைசிறந்த பேராலயங்கள் பல கட்டப்பட்டன. அவற்றுள் சிறப்பாக, புனித பேதுரு பேராலயம், “தூய இலாத்தரன் யோவான் முதன்மைப் பேராலயம்” (Basilica of St. John Lateran), “எருசலேம் திருச்சிலுவை பேராலயம்” (Santa Croce in Gerusalemme), “பழைய தூய பேதுரு பேராலயம்” (Old St. Peter's Basilica) ஆகியவையும், பிற பல மறைச்சாட்சியரின் கல்லறைகள் மீது கட்டப்பட்ட ஆலயங்களும் உள்ளடங்கும்.

திருப்பணிக்காலத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகள்:
முதலாம் சில்வெஸ்தரின் திருப்பணியின் போது, கி.பி. 325ம் ஆண்டு, “நிசேயா பொதுச் சங்கம்” (First Council of Nicaea) நிகழ்ந்தது. அச்சங்கத்தைக் கூட்டியது சில்வெஸ்டர் அல்ல, மாறாக காண்ஸ்டண்டைன் (Constantine) மன்னன் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது. அச்சங்கத்தில் சில்வெஸ்டர் நேரடியாகப் பங்கேற்கவில்லை. ஆனால் அவருடைய பதில் ஆட்களாக “வீத்துஸ்” (Vitus), “வின்சென்சியுஸ்” (Vincentius) என்னும் இரு மூப்பர்-குருக்கள் (Legates) கலந்துகொண்டனர். சங்கத்துக்குத் தலைமை தாங்கியவர் கோர்தோபா ஆயர் ஓசியுஸ் என்பவர். சங்கம் நிறைவேற்றிய தீர்மானங்களை சில்வெஸ்தர் ஏற்று, ஒப்புதல் வழங்கினார்.

திருத்தந்தையின் வாழ்க்கை பற்றிய புனைவு நிகழ்ச்சிகள்:
சில்வெஸ்தரின் வாழ்க்கையில் நடந்ததாக சில நிகழ்வுகள் பிற்காலத்தில் (கி.பி. 5ம் நூற்றாண்டு) புனையப்பட்டன. காண்ஸ்டண்டைன் மன்னன் தொழுநோயால் அவதிப்பட்டதாகவும், சில்வெஸ்தர் அவருக்குத் திருமுழுக்கு அளித்ததும் மன்னரின் நோய் நீங்கியதாகவும் புனைவுகள் உருவாகின. கொடிய நோயிலிருந்து விடுதலை பெற்ற மன்னர் சில்வெஸ்தருக்குத் தலைவணங்கினார். சில்வெஸ்தர் ஒரு மணிமுடியை எடுத்து காண்ஸ்டண்டைன் மன்னனின் தலையில் சூடினார்.

பிற்காலத்தில் எழுந்த இப்புனைவு வலியுறுத்திய கருத்து இது:
மன்னருக்கு அதிகாரம் வழங்கியவர் திருத்தந்தையே. எனவே திருத்தந்தைக்கு ஆன்மிக அதிகாரமும் உலக ஆட்சி அதிகாரமும் உண்டு. இக்கருத்தின் அடிப்படையில் பிற்காலத்தில் திருத்தந்தையர் ஆன்மிகத் தலைவர்களாக மட்டுமன்றி, அரசியல் ஆட்சியாளர்களாகவும் தங்கள் பதவியை நியாயப்படுத்தினர். மேலும் ஆட்சியாளர்களை நியமிக்கவும் பதவி நீக்கம் செய்யவும் தமக்கு அதிகாரம் உண்டு என்றும் உரிமைகொண்டாடினர்.

மற்றொரு புனைவுப்படி, சில்வெஸ்டர் ஒரு பறவை நாகத்தைக் கொன்று, அந்த விலங்கின் தாக்குதலுக்குப் பலியாகி இறந்தவர்களுக்கு அற்புதமாக மீண்டும் உயிர் கொடுத்தார். சில்வெஸ்டரைச் சித்தரிக்கும் ஓவியங்களில் பறவை நாகம் இடம்பெறுவது இப்புனைவின் அடிப்படையில்தான்.

இறப்பும் அடக்கமும்:
சில்வெஸ்தரின் பணிக்காலம் ஏறக்குறைய 22 ஆண்டுகள் நீடித்தது. அவர் கி.பி. 335ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 31ம் நாள் இறந்தார். அவரது உடல் ரோம் நகரை அடுத்த சலாரியா சாலையில் அமைந்த புனித பிரிசில்லா கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அவரது உடலில் மீபகுதிகளை 762ம் ஆண்டில் திருத்தந்தை “முதலாம் பவுல்” ரோம் நகருக்கு உள்ளே அமைந்த சில்வெஸ்டர் ஆலயத்தில் மீள் அடக்கம் செய்தார்.

நினைவுத் திருவிழா:
கத்தோலிக்க திருச்சபை சில்வெஸ்டரின் நினைவுத் திருவிழாவை டிசம்பர் மாதம், 31ம் நாள் கொண்டாடுகிறது. கிழக்கத்திய மரபுவழி திருச்சபைகளும் கிழக்கு மரபுவழி கத்தோலிக்க சபைகளும் ஜனவரி மாதம், 2ம் நாள் சிறப்பிக்கின்றன.

No comments:

Post a Comment