Saturday, December 28, 2019

† மாசில்லா குழந்தைகள் படுகொலை † (டிசம்பர் 28)



† இன்றைய திருவிழா †
(டிசம்பர் 28)

✠ மாசில்லா குழந்தைகள் படுகொலை ✠
(Massacre of the Innocents)

மறைசாட்சிகள்:
(Martyrs)

நினைவுத் திருநாள்: டிசம்பர் 28

மாசில்லா குழந்தைகள் படுகொலை என்பது, திருவிவிலியத்தின்படி, “யூதர்களின் அரசனான” (King of the Jews) “முதலாம் ஏரோது”, (Herod the Great) பெத்லகேமில் (Bethlehem) இருந்த குழந்தைகளை கொன்ற நிகழ்வினைக் குறிக்கும். மத்தேயு நற்செய்தியின்படி, ஞானிகள் தன்னை ஏமாற்றியதை கண்டு மிகுந்த சீற்றம் கொண்ட ஏரோது, அவர்களிடம் கருத்தைக் கேட்டறிந்ததற்கேற்ப காலத்தைக் கணக்கிட்டு, “பெத்லகேமிலும்” (Bethlehem) அதன் சுற்றுப்புறமெங்கும் ஆட்களை அனுப்பி இரண்டு வயதும் அதற்கு உட்பட்டவையுமான எல்லா ஆண் குழந்தைகளையும் கொன்றான்.

அப்பொழுது “ராமாவிலே” (Ramah) ஒரு குரல் கேட்கிறது; ஒரே புலம்பலும் பேரழுகையுமாய் இருக்கிறது; “ராச்சேல்” (Rachel) தன் குழந்தைகளுக்காக அழுது கொண்டிருக்கிறார்; ஆறுதல் பெற அவர் மறுக்கிறார்; ஏனெனில் அவர் குழந்தைகள் அவரோடு இல்லை என்று இறைவாக்கினர் “எரேமியா” (Jeremiah) உரைத்தது நிறைவேறியது.

கொல்லப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை விவிலியத்தில் குறிப்பிடப்படவில்லை எனினும், அச்சமயத்தில் ஏரோது அரசன் 14 ஆயிரம் சிறுவர்களையும் குழந்தைகளையும் கொன்றான் என கிரேக்க மரபு கூறுகிறது. ஆனால், சிரியா நாட்டினரின் நம்பிக்கையின்படி இவ்வாறு கொல்லப்பட்ட சிறுவர்கள் 64 ஆயிரம் எனவும், மத்தியகால எழுத்தாளர்களின் கூற்றுப்படி இவ்வாறு கொல்லப்பட்ட சிறுவர்கள் ஒரு இலட்சத்து 44 ஆயிரம் எனவும் சொல்லப்படுகின்றது. இருந்தபோதிலும், நவீன எழுத்தாளர்கள் இந்த எண்ணிக்கையைக் குறைத்தே சொல்கின்றனர். பெத்லகேம் ஏறக்குறைய ஆயிரம் பேரைக் கொண்ட சிறிய நகரம், அதனால் அச்சமயத்தில் ஏறக்குறைய இருபது பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்கின்றனர்.

விவிலிய சான்று:
மாசில்லா குழந்தைகளின் படுகொலை, மத்தேயு நற்செய்தி 2:16-18ல் (Gospel of Matthew (2:16-18) கூறப்பட்டுள்ளன.

கொல்லப்பட்ட இக்குழந்தைகள் அனைவரும் யூதக் குழந்தைகளாய் இருப்பினும், அவர்கள் யாவரும் கிறிஸ்தவ மறைசாட்சிகளாக ஏற்கப்படுகின்றனர்.

No comments:

Post a Comment