Saturday, December 21, 2019

† புனிதர் பீட்டர் கனிசியஸ் † (டிசம்பர் 21)



† இன்றைய புனிதர் †
(டிசம்பர் 21)

✠ புனிதர் பீட்டர் கனிசியஸ் ✠
(St. Peter Canisius)

குரு, மறைப்பணியாளர், மறைவல்லுநர்:
(Priest, Religious and Doctor of the Church)

பிறப்பு: மே 8, 1521
நிஜ்மெகன், ஹப்ஸ்பர்க் நெதர்லாந்து (தற்போதைய நெதர்லாந்து)
(Nijmegen, Habsburg Netherlands)

இறப்பு: டிசம்பர் 21, 1597 (வயது 76)
ஃப்ரிபோர்க், சுவிட்சர்லாந்து
(Fribourg, Switzerland)

ஏற்கும் சபை/ சமயம் :
கத்தோலிக்க திருச்சபை
(Catholic Church)

அருளாளர் பட்டம்: கி.பி. 1864
திருத்தந்தை ஒன்பதாம் பயஸ்
(Pope Pius IX)

புனிதர் பட்டம்: மே 21, 1925
திருத்தந்தை பதினொன்றாம் பயஸ்
(Pope Pius XI)

முக்கிய திருத்தலங்கள்:
புனித மிக்கேல் கல்லூரி, ஃப்ரிபோர்க், சுவிட்சர்லாந்து
(College of St. Michael, Fribourg, Switzerland)

நினைவுத் திருவிழா: டிசம்பர் 21

பாதுகாவல்:
கத்தோலிக்க அச்சகங்கள், ஜெர்மனி
(Catholic press, Germany)

புனித பீட்டர் கனிசியஸ் ஒரு பிரபல “டட்ச் இயேசு சபை கத்தோலிக்க குரு” (Dutch Jesuit Catholic priest) ஆவார். இவர், “எதிர் கிறிஸ்தவச் சீர்திருத்த இயக்கத்தின்”போது (Protestant Reformation) ஜெர்மனி (Germany), ஆஸ்திரியா (Austria), போஹேமியா (Bohemia), மோராவியா (Moravia), மற்றும் சுவிட்சர்லாந்து (Switzerland) ஆகிய நாடுகளில் கத்தோலிக்க திருச்சபையின் படிப்பினைகளையும் கத்தோலிக்க விசுவாசம் பற்றியும் மக்களுக்கு பிரசங்கித்த காரணத்தால் இவர் பெயர் பிரபலம் பெற்றது. எதிர் கிறிஸ்தவச் சீர்திருத்த இயக்கத்திற்குப் பின்பு கத்தோலிக்க திருச்சபை ஜெர்மனியில் கண்ட மறுமலர்ச்சிக்கு பெரும்பாலான காரணம் இவரது தலைமையிலான இயேசு சபைதான் என நம்பப்படுகின்றது.

இவர் கத்தோலிக்க திருச்சபையில் புனிதர் எனவும் திருச்சபையின் மறைவல்லுநர் எனவும் ஏற்கப்படுகின்றார்.

கி.பி. 1521ம் ஆண்டு, அந்நாளைய ரோமப்பேரரசின் கட்டுப்பாட்டுக்குட்பட்ட “நிஜ்மெகன்” (Nijmegen), “ஹப்ஸ்பர்க் நெதர்லாந்தில்” (Habsburg Netherlands) (தற்போதைய நெதர்லாந்து) பிறந்த பீட்டர் கனிசியஸின் தந்தை வசதியான டச்சு நாட்டின் நகரச் சட்ட முதல்வரான (Burgomaster) “ஜாகோப் கனிஸ்” (Jacob Kanis) ஆவார். இவரது தாயாரின் பெயர் “எகிடியா வன் ஹௌவேனிஞ்சன்” (Egidia van Houweningen) ஆகும். இவர் பிறந்த சிறிது காலத்திலேயே இவரது தாயார் மரணமடைந்தார்.

கொலோன் நகர பல்கலையில் (University of Cologne) கல்வி கற்ற கனிசியஸ், கி.பி. 1540ல் தமது பத்தொன்பதே வயதில் முதுகலை பட்டம் பெற்றார். அங்கே அவர் இயேசு சபை நிறுவனர்களில் ஒருவரான “பீட்டர் ஃபாபரை” (Peter Faber) சந்தித்தார். அவர் மூலமாகவே கி.பி. 1543ம் ஆண்டில் புதிதாய் தொடங்கப்பட்ட இயேசு சபையில் சேர்ந்தார். இயேசு சபையில் இணைந்த முதல் “டட்ச்” (Dutchman) இன கிறிஸ்தவரும் இவரேயாவார்.

அந்நாளில் பீட்டர் கனிசியஸ் தமது பிரசங்கங்களாலும் எழுத்துக்களாலும் மிகவும் செல்வாக்குள்ள கத்தோலிக்கராக திகழ்ந்தார்.

பீட்டர் கனிசியஸ், கையில் கிடைத்த வசதிகளையும் வாய்ப்புகளையும் கொண்டு முதல் ஜெர்மன் மொழி பேசும் இயேசு சபை கல்லூரி ஒன்றினை (German-speaking Jesuit college) நிறுவி பராமரித்து நிர்வகித்தார். அதே வேளையில் நகரிலும் சுற்றியுள்ள பகுதிகளிலும் அடிக்கடி நற்செய்தி பிரசங்கிப்பதிலும் பல்கலையில் விவாதங்கள் மற்றும் கற்பிப்பதிலும் நேரத்தையும் காலத்தையும் செலவிட்டார். கடினமான மற்றும் அப்போதைய ஆபத்தான அவரது பணிச்சுமைகளினூடே கல்லூரிகளுக்கும் நகரின் சுற்றுப்பகுதிகளுக்கும் அடிக்கடி அவர் மேற்கொண்ட பயணங்களாலும் அவரது பிரசங்கங்களாலும் அவர் ஜெர்மனியின் இரண்டாவது அப்போஸ்தலராக உருவானார்.

பீட்டர் கனிசியஸ் “பேரரசன் முதலாம் ஃபெர்டினாண்டிடம்” (Emperor Ferdinand I) ஒரு வலுவான செல்வாக்கை பெற்றிருந்தார். பேரரசரின் மூத்த மகன் (பின்னாளில் இரண்டாம் மேக்ஸ்மிலியன்) (Later Maximilian II), நீதிமன்ற போதகர், திருமணமான பாதிரியார் போன்ற பதவிகளுக்கு "டன்ஹௌசெர்" (Tannhauser) எனும் ஜெர்மன் கவிஞரை நியமித்திருந்தார். அவர் லூதரன் கோட்பாடுகளைப் போதித்தார். இதனால் பீட்டர் கனிசியஸ், தமது எதிர்ப்பினை எழுத்து மூலமாகவும் நேரிலும் பேரரசரிடம் தெரிவித்தார். பொது விவாத மேடைகளில் டன்ஹௌசெரிடம் தமது கடும் எதிர்ப்பினைத் தெரிவித்தார். இதனால் வேறு வழியற்ற மேக்ஸ்மிலியன் (Maximilian II) டன்ஹௌசெரை பதவி நீக்கம் செய்ய வேண்டிய கட்டாயத்திற்குள்ளானான். ஆனால் தமது வாழ்நாள் முழுதும் பீட்டர் கனிசியஸுக்கு எதிராக காழ்ப்புணர்வு கொண்டிருந்தான்.

கி.பி. 1591ம் ஆண்டில், எழுபது வயதான பீட்டர் கனிசியஸுக்கு ஏற்பட்ட பக்கவாதம் (Stroke), அவரது உடலின் ஒரு பகுதியை செயலிழக்கச் செய்தது. அதே உடல்நிலையுடன் அவர் தமது பிரசங்கங்களையும், பிற பணிகளையும் தமது செயலாளரின் உதவியுடன், தமது மரணம்வரை தொடர்ந்தார்.

கி.பி. 1597ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 21ம் தேதி, ஸ்விட்சர்லாந்திலுள்ள (Switzerland) ஃப்ரிபோர்க் (Fribourg) எனுமிடத்தில் மரித்த இவரது உடல், ஆரம்பத்தில் நிக்கோலஸ் ஆலயத்தில் (Church of St. Nicholas) அடக்கம் செய்யப்பட்டது. பின்னர் அவரது உடல், அவர் நிறுவியதும், தமது கடைசி காலத்தின் ஒரு வருடத்தை அவர் செலவிட்ட இடமுமான இயேசு சபை கல்லூரி ஆலயத்திற்கு மாற்றப்பட்டது. அங்கே, பிரதான பலிபீடத்தின் முன்பாக அவருடைய உடல் அடக்கம் செய்யப்பட்டது. கடைசியாக அவர் தங்கியிருந்த அறை அருட்பணியாளர்களுக்கான சிற்றாலயமாக மாற்றப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment