Friday, December 20, 2019

† சிலோஸ் நகர புனிதர் டோமினிக் † (டிசம்பர் 20)



† இன்றைய புனிதர் †
(டிசம்பர் 20)

✠ சிலோஸ் நகர புனிதர் டோமினிக் ✠
(St. Dominic of Silos)

மடாதிபதி:
(Abbot)

பிறப்பு: கி.பி. 1000
கெனாஸ் (தற்போதைய ரியோஜா), ஸ்பெய்ன்)
(Cañas (Modern Rioja), Spain)

இறப்பு: டிசம்பர் 20, 1073
சிலோஸ்
(Silos)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

முக்கிய திருத்தலங்கள்:
சேன்ட்ட டோமிங்கோ டி சிலோஸ் துறவுமடம்
(Abbey of Santo Domingo de Silos)
சேன்ட்ட டோமிங்கோ டி சிலோஸ், ஸ்பெய்ன்
(Santo Domingo de Silos, Spain)

நினைவுத் திருநாள்: 20 டிசம்பர்

பாதுகாவல்:
வெறிநாய் கடி நோய்க்கு எதிராக
வெறி நாய்களுக்கெதிராக
பூச்சிகளுக்கெதிராக
கர்ப்பிணி பெண்கள்
கைதிகள்
மேய்ப்பர்கள்

சிலோஸ் நகர புனிதர் டோமினிக், ஒரு ஸ்பேனிஷ் துறவி ஆவார். அவர் மடாதிபதியாக பணியாற்றிய "சேன்ட்ட டாமிங்கோ டி சிலோஸ் துறவுமடம்" (Abbey of Santo Domingo de Silos) இவரது பெயரில் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. கத்தோலிக்க திருச்சபையால் இவர் புனிதராக வணங்கப்படுகிறார்.

"கேனாஸ் லா ரியோஜா" (Cañas, La Rioja) என்ற இடத்தில் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்த டோமினிக், "சேன் மிலன் டி லா கொகோல்லா துறவு மடங்களில்" (Monasteries of San Millán de la Cogolla) "பெனடக்டைன்" (Benedictine monk) துறவியாக இணையுமுன், அவர் கால்நடைகளை மேய்ப்பவராக இருந்தார்.

குருத்துவ அருட்பொழிவு பெற்ற அவர், விரைவிலேயே துறவற புகுநிலையினரின் தலைமைப் பொறுப்பையும் ஏற்றார். ஆனால், சிறிது காலத்திலேயே, "நவர்ரே" (Navarre) நாட்டின் அரசன் "மூன்றாம் கார்ஸியா ஸன்ச்செஸ்" (King García Sánchez III) அவரையும் அவரது இரண்டு சக துறவிகளையும் அங்கிருந்து விரட்டிவிட்டான். காரணம், துறவு இல்ல நிலங்களை கையகப்படுத்தும் அரசனின் திட்டங்களுக்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததேயாகும்.

கி.பி. 1041ம் ஆண்டு, லியோன் (León) நாட்டின் அரசன் "முதலாம் ஃபெர்டினான்ட்" (King Ferdinand I) டோமினிக்குக்கும் அவரது சக துறவியருக்கும் அடைக்கலம் அளித்தார்.

அவர்கள் "சிலோஸ்" (Silos) நகரிலுள்ள புனிதர் செபாஸ்டியனின் (St. Sebastian) சிதைந்துபோன ஒரு துறவு இல்லத்தில் தஞ்சம் புகுந்தனர். அங்கே ஏற்கனவே ஆறு துறவியரும் இருந்தனர். புனிதர் செபாஸ்டியனின் மரணத்தின் பின்னர், டோமினிக் அவரது துறவு மடத்திற்கு தலைவராக நியமிக்கப்பட்டார்.

சிதைந்து போயிருந்த அம்மடம் அவரால் புணரமைக்கப்பட்டது. ஆன்மீகவழியில் மட்டுமல்லாது அதை சிறந்ததொரு அருங்காட்சியகமாக, உயர்கல்வியில் பாண்டித்தியம் பெற உதவும் இடமாக, குறிப்பிடத்தக்க தொண்டு நிறுவனமாக, புத்தக வடிவமைப்பு மையமாக, புத்தகமாலயமாக, உருவாக்கினார். ரோமானிய பாணியில் மறுகட்டமைப்புகள் உருவாக்கப்பட்டன. துறவி மடத்தில் கையெழுத்துப் படிவங்களுக்கு நகல் எடுக்கும் இடம் ஒன்றும் உருவாக்கப்பட்டது. இவை அனைத்தும் செய்ய அங்கேயே தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்கள் செய்யும் பட்டறை ஒன்றும் நிறுவப்பட்டது. அதிலிருந்து வந்த வருமானம் மேற்கண்ட அனைத்து செலவுகளுக்கும் உதவியது.

டோமினிக்கின் குணமளிக்கும் சிகிச்சை முறைகள் பிரபலமாயின. அவரது துறவு இல்லம் பிரசித்தி பெற்ற "மொஸாரபிக் வழிபாட்டு முறையின்" (Mozarabic liturgy) மையமாக விளங்கியது. பண்டைய ஸ்பெயின் நாட்டின் "விஸிகோதிக் கையெழுத்துப்படிவங்கள்" (Visigothic script) அங்கே பாதுகாக்கப்பட்டுவந்தன. பணக்கார புரவலர்கள் துறவு இல்லத்தை தத்தெடுத்தனர். டோமினிக் பெரும்தொகை திரட்டி இஸ்லாமியர்களால் சிறை பிடிக்கப்பட்டிருந்த கிறிஸ்தவர்களை மீட்டார்.

வெறும் ஆறு துறவியர்களுடன் புணரமைக்கப்பட்ட துறவு இல்லம், டோமினிக்கின் மரணத்தின்போது (20 டிசம்பர் 1073) நாற்பதாக உயர்ந்திருந்தது.

No comments:

Post a Comment