Thursday, December 19, 2019

† புனிதர் முதலாம் அனஸ்தாசியஸ் † (டிசம்பர் 19)



† இன்றைய புனிதர் †
(டிசம்பர் 19)

✠ புனிதர் முதலாம் அனஸ்தாசியஸ் ✠
(St. Anastasius I)

39ம் திருத்தந்தை:
(39th Pope)

பிறப்பு: தெரியவில்லை

இறப்பு: டிசம்பர் 19, 401
ரோம் (Rome)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

ஆட்சி தொடக்கம்: நவம்பர் 27, 399

ஆட்சி முடிவு: டிசம்பர் 19, 401

நினைவுத் திருநாள்: டிசம்பர் 19

திருத்தந்தை முதலாம் அனஸ்தாசியஸ் (Pope Anastasius I) கத்தோலிக்க திருச்சபையில் உரோமை ஆயராகவும், திருத்தந்தையாகவும் கி.பி. 399ம் ஆண்டு, நவம்பர் 27ம் தேதிமுதல், கி.பி. 401ம் ஆண்டு, டிசம்பர் 19ம் தேதிவரை ஆட்சிசெய்தார். இவர் கத்தோலிக்க திருச்சபையின் 39ம் திருத்தந்தை ஆவார்.

வரலாற்றுக் குறிப்புகள்:
திருத்தந்தை முதலாம் அனஸ்தாசியஸ் திருச்சபையின் தலைமைப் பதவியை ஏற்பதற்கு முன், திருத்தந்தையாக இருந்தவர் "சிரீசியஸ்" (Pope Siricius) ஆவார். அனஸ்தாசியஸ் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்படுமுன் அவருக்கு ஒரு மகன் இருந்தார். அவர் அனஸ்தாசியசின் மரணத்தின்பின் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, "முதலாம் இன்னசெண்ட்" (Pope Innocent I) என்னும் பெயரைச் சூடிக்கொண்டார்.

இறையியலார் ஓரிஜென் கண்டனம் செய்யப்படுதல்:
திருத்தந்தை முதலாம் அனஸ்தாசியஸ் வரலாற்று முக்கியத்துவம் பெறுவதற்கு ஒரு காரணம், அவர் கி.பி. 2-3 நூற்றாண்டுக் காலத்தில், "அலெக்ஸ்சாண்ட்ரியாவில்" (Alexandria) வாழ்ந்த “ஓரிஜென்” (Origen) என்னும் தலைசிறந்த இறையியலார் கிரேக்கத்தில் எழுதிய இறையியல் நூல் இலத்தீனில் (Latin) மொழிபெயர்க்கப்பட்டதும், அது தப்பறையான கொள்கைகளை உள்ளடக்கியதாகக் கருதப்பட்டதால் அவரைக் கண்டனம் செய்ததும் ஆகும்.

தவறான கொள்கைகள் கண்டிக்கப்படல்:
முதலாம் அனஸ்தாசியஸ் காலத்தில், கிறித்தவ மதம் துன்புறுத்தப்பட்ட பின்னணியில், தம் மதத்தை மறுத்து உரோமை அரசனுக்குப் பணிந்த கிறித்தவர்கள், தங்கள் தவற்றினை ஏற்று மீண்டும் கிறித்தவத்துக்குத் திரும்ப விரும்பினார்கள். அவர்கள் மீண்டும் ஏற்பது குறித்தும், அவர்களுக்கு மீண்டும் திருமுழுக்கு அளிக்க வேண்டுமா - வேண்டாமா என்பது குறித்தும் சர்ச்சை தொடர்ந்து நிகழ்ந்தது. "டொனாட்டிய" (Donatism) கொள்கை, அவர்களுக்கு மறு-திருமுழுக்கு அளிக்க வேண்டும் என்று வாதாடியது. அவர்களை மீண்டும் சபையில் ஏற்பது குறித்த நிபந்தனைகளைத் தளர்த்த வேண்டும் என்று ஆப்பிரிக்க ஆயர்கள் சிலர் கேட்டனர். அதற்கு, திருத்தந்தை அத்தனாசியஸ், கார்த்தேஜ் சங்கத்திற்கு (கி.பி. 401ம் ஆண்டு) எழுதிய கடிதத்தில் பதில் அளித்தார்.

திருத்தந்தையின் ஆதரவாளர்கள்:
முதலாம் அனஸ்தாசியசுக்கு ஆதரவு அளித்தவர்களுள் புனிதர் ஜெரோம் (St. Jerom), புனிதர் நோலா பவுலீனுஸ் (St. Paulinus of Nola), ஆகியோர் முக்கியமானவர்கள். அவ்விருவரும் அனஸ்தாசியசுக்கு முன் திருத்தந்தையாக இருந்த சிரீசியசின் செயல்பாடுகளை விமர்சித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடக்க கால மேலைத் திருச்சபையின் தலைசிறந்த இறையியலராகக் கருதப்படும் புனிதர் அகுஸ்தீன் (St. Augustine) (கி.பி. 354-430) திருத்தந்தை அனஸ்தாசியஸ் தப்பறைக் கொள்கைகளைக் கடிந்துகொண்டதைப் பாராட்டியுள்ளார். மேலும் அவர் அனஸ்தாசியசின் நண்பராகவும் திகழ்ந்தார்.

இறப்பும் திருவிழாவும்:
திருத்தந்தை முதலாம் அத்தனாசியஸ் கி.பி. 401ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 19ம் நாளன்று, இறந்தார். அவரது உடல் உரோமையில் "போர்த்துவேன்சிசு" சாலையில் அமைந்த "போன்ந்தியன் கல்லறைத் தோட்டத்தில்" (Catacomb of Pontian) அடக்கம் செய்யப்பட்டது.

அவரது நினைவுத் திருவிழா, டிசம்பர் மாதம், 19ம் நாள் கொண்டாடப்படுகிறது.

No comments:

Post a Comment