Thursday, December 12, 2019

† குவாதலூப் அன்னை திருவிழா † (டிசம்பர் 12)



† இன்றைய திருவிழா †
(டிசம்பர் 12)

✠ குவாதலூப் அன்னை திருவிழா ✠
(Feast of the Our Lady of Guadalupe)

இடம்:
தேபியாக் குன்று, மெக்சிகோ நகரம்
(Tepeyac Hill, Mexico City)

தேதி: டிசம்பர் 12, 1531

சாட்சிகள்:
புனிதர் ஜூவான் டியெகோ
(Saint Juan Diego)

வகை: மரியாளின் தரிசனம் (Marian Apparition)

கத்தோலிக்க புனித ஒப்புதல்: அக்டோபர் 12, 1895
குவாதலூப் அன்னைக்கு திருத்தந்தை பதின்மூன்றாம் லியோவால் புனித முடிசூட்டும் விழாவின்போது
(During the Canonical Coronation granted by Pope Leo XIII)

முக்கிய திருத்தலம்:
குவாதலூப் அன்னை பேராலயம், தேபியாக் குன்று, மெக்சிகோ நகரம், மெக்ஸிகோ
(Basilica of Our Lady of Guadalupe, Tepeyac Hill, Mexico City, Mexico)

திருவிழா நாள்: டிசம்பர் 12

பாதுகாவல்:
மெக்ஸிகோ
அமெரிக்க நாடுகள்
ஃபிலிப்பைன்ஸ்
செபு

"குவாதலூப் அன்னை" என்பது இயேசுவின் அன்னையாம் தூய கன்னி மரியாளுக்கு கத்தோலிக்க திருச்சபையில் வழங்கப்படும் பெயர்களுள் ஒன்றாகும். குறிப்பாக இது, புனிதர் ஜூவான் டியெகோவின் மேற்போர்வையில் பதிந்துள்ள மரியாளின் திருவோவியத்திற்கு அளிக்கப்படும் பெயராகும். இத்திருஓவியம், தற்போது மெக்சிகோ நாட்டின் தலைநகரான மெக்சிகோ நகரிலுள்ள (Basilica of Our Lady of Guadalupe) குவாதலூப் அன்னை பேராலயத்தில் பாதுகாக்கப்படுகின்றது.

இப்பேராலயமானது, மெக்சிக்கோவின் மிகவும் புகழ்பெற்ற சமய மற்றும் கலாச்சார சின்னமாகக் கருதப்படுவது மட்டுமல்லாது, உலகின் அதிக திருயாத்திரீகர்கள் தரிசித்த கத்தோலிக்க திருத்தலமுமாகும். இவ்வோவியத்தில் இருக்கும் அன்னை மரியாளுக்கு மெக்சிக்கோவின் அரசி, என்னும் பெயரும் உண்டு. குவாதலூப் அன்னை என்னும் பட்டத்தின் கீழ் ஒருகாலத்தில் ஃபிலிப்பைன்சின் பாதுகாவலியாகவும் அன்னை மரியாள் அறியப்பட்டார். (ஆயினும் இது 1935ம் ஆண்டு, திருத்தந்தை பதினொன்றாம் பயஸால் நீக்கப்பட்டது). 1999ல் திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் குவாதலூப் அன்னை என்னும் பட்டத்தின் கீழ் தூய கன்னி மரியாளை அமெரிக்காக்களின் பாதுகாவலி, இலத்தீன் அமெரிக்காவின் அரசி, மற்றும் கருவிலிருக்கும் குழந்தைகளின் பாதுகாவலி என அழைத்துள்ளார்.

திருவோவியத்தின் வரலாறு:
புதிய உலகின் பூர்வீக இனமான அஸ்டெகிலிருந்து மனமாறி கிறிஸ்தவ மறையினைத் தழுவியவரும், ஏழை விவசாயியுமானவர் ஜூவான் டியெகோ (Juan Diego). அக்காலத்தில் ஸ்பேனிஷ் பேரரசில் மரியாளின் அமல உற்பவம் விழா டிசம்பர் 9ம் தேதியன்று சிறப்பிக்கப்படும் வழக்கம் இருந்தது. இவ்விழா நாளான டிசம்பர் 9ம் தேதி 1531ம் ஆண்டு, ஜூவான் டியெகோ அதிகாலையில் தனது கிராமத்தில் ஆலயம் ஏதும் இல்லாததால், மெக்சிகோ நகரிலுள்ள ஆலயம் ஒன்றில் திருப்பலியில் பங்கு கொள்வதற்காக தேபியாக் குன்று வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அக்குன்றின் உச்சியில், சூரியனைப் போன்ற பிரகாசமான ஒளியைக் கண்டதாகவும். அதிலிருந்து இனிமையான இசையைக் கேட்டதாகவும் நம்பப்படுகின்றது. பின்னர் அங்கிருந்து ஒரு பெண்ணின் குரல், டியெகோவை அக்குன்றில் ஏறி வருமாறு அழைத்தது எனவும் டியெகோ அங்கு ஏறிச் சென்றபோது, விண்ணக மகிமையில், பிரகாசமான ஒளிக்கு மத்தியில் தூய கன்னி மரியாள் நிற்பதைக் கண்டார் என்கின்றனர். கன்னி மரியாள் டியெகோவின் தாய்மொழியான “நஹுவாட்ல்” மொழியில் (Nahuatl language) பேசி, தனக்காக ஒரு சிற்றாலயம் கட்ட வேண்டும் என மெக்சிகோ நகர ஆயரிடம் சொல்லும்படி டியெகோவை அனுப்பினார் என நம்பப்படுகின்றது.

டியெகோவும் மெக்சிகோ பேராயரான “ஜுவான் டி ஸுமர்ரகா” (Juan de Zumárraga) என்பவரிடம் சென்று அதனைத் தெரிவித்தபோது, ஆயர் டியெகோவை நம்பவில்லை. அடுத்த நாளும் ஆயரிடம் சென்று தனது ஆவலைத் தெரிவிக்குமாறு பணித்தார் அன்னை மரியாள். அதேபோல் டியெகோ ஆயரிடம் சென்று சொன்னதும், அக்காட்சிக்கு ஓர் அடையாளம் தருமாறு அப்பெண்ணிடம் கேட்குமாறு ஆயர் டியெகோவிடம் கேட்டுக்கொண்டார். அன்று மாலையே டியெகோ அன்னை மரியாளிடம் நடந்தததைச் சொன்னார். அன்னை மரியாளும் அடுத்த நாள் காலையில் அவரின் வேண்டுகோளை நிறைவேற்றுவதாக உறுதி கூறினார். ஆனால் டியெகோவின் மாமா “ஜூவான் பெர்னார்டினோ” (Juan Bernardino), திடீரென கடும் நோயால் தாக்கப்பட்டதால் அடுத்த நாள் அங்குச் செல்ல முடியவில்லை.

இறந்து கொண்டிருந்த தனது மாமாவுக்கு இறுதி திருவருட்சாதனம் கொடுப்பதற்காக, டிசம்பர் 12ம் தேதி, ஒரு குருவை அழைக்கச் சென்றார் டியெகோ. அப்போது அன்னை மரியாள், டியெகோவைச் சந்திப்பதற்காக தேபியாக் குன்றின் அடியில் இருந்த சாலையில் டியெகோவுக்கு காட்சியளித்து அவரின் மாமா நலமைடைவார், இறக்கமாட்டார் எனவும், உடனே தான் முன்னர் மூன்று முறை காட்சியளித்த தேபியாக் குன்றின் உச்சிக்குச் சென்று அங்கு பூத்துக்குலுங்கி இருக்கும் மலர்களை பறித்துக்கொண்டு தன்னிடம் வருமாறு கூறினார். இந்தப் பாறைக் குன்றின் உச்சியில் எந்தப் பூக்களும் பூக்க வாய்ப்பில்லை என்பது டியெகோவுக்குத் தெரிந்திருந்தும் அவர் அங்கு சென்றார். அங்கு அழகிய பூந்தோட்டம் இருப்பதைக் கண்டார். அவைகளைப் பறித்து தனது மேற்போர்வையில் பொதிந்து வந்து அன்னை மரியாளிடம் கொடுத்தார். அந்தப் பூக்களை அவரது மேற்போர்வையில் அழகுபடுத்திக் கொடுத்து அதை ஆயரிடம் கொண்டு போகச் சொன்னார் அன்னை மரியாள். ஆயரை நம்ப வைக்க, தான் தரும் அடையாளம் இதுவே என்று சொல்லி அனுப்பினார்.

டியெகோ, மெக்சிகோ பேராயரான “ஜுவான் டி ஸுமர்ரகா” (Juan de Zumárraga) என்பவரின் முன்னால் போய் நின்று, தனது மேற்போர்வையைத் திறந்து காண்பித்தார். அதிலிருந்து மலர்கள் கொட்டின. ஆனால் ஆயர் மற்றும் டியெகோவின் கண்களையே நம்ப முடியாத வகையில் டியெகோவின் மேற்போர்வையில் அழகிய அன்னை மரியாளின் திருஉருவம் பதிந்திருந்தது. டியெகோ எப்படி வர்ணித்திருந்தாரோ, அதேமாதிரியான உருவம் அதில் இருந்தது. அதே நாளில் அன்னை மரியாள், டியெகோவின் மாமா “ஜூவான் பெர்னார்டினோ” (Juan Bernardino) முன்பும் தோன்றி நலம் அளித்தார். பெர்னார்டினோ, தனக்கு நடந்த புதுமையையும் ஆயரிடம் கூறுமாறு அன்னை மரியாள் சொல்லியிருந்ததை டியெகோவிடம் சொன்னார். அத்துடன் தனது இந்த உருவத்தை “குவாதலூப் அன்னை” என்ற பெயரில் அழைத்து தனக்கு வணக்கம் செலுத்துமாறும் பெர்னார்தினோவிடம் அன்னை மரியாள் சொல்லியிருந்தார். இன்றளவும் ஏறக்குறைய 500 ஆண்டுகளாக அன்னை மரியாள், இப்பெயரிலேயே இங்கு அழைக்கப்பட்டு வருகிறார்.

No comments:

Post a Comment