Saturday, November 23, 2019

† அருளாளர் மிகுவேல் அகஸ்டின் ப்ரோ † (நவம்பர் 23)


† இன்றைய புனிதர் †
(நவம்பர் 23)

✠ அருளாளர் மிகுவேல் அகஸ்டின் ப்ரோ ✠
(Blessed Miguel Agustín Pro)

இயேசுசபை குரு/ மறைசாட்சி:
(Jesuit priest and martyr)

பிறப்பு: ஜனவரி 13, 1891
குவாதலுபே, ஸகட்காஸ், மெக்சிகோ
(Guadalupe, Zacatecas, Mexico)

இறப்பு: நவம்பர் 23, 1927 (வயது 36)
மெக்சிகோ நகர், மெக்சிகோ
(Mexico City, Mexico)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
லூதரன் திருச்சபை
(Lutheran Church)

முக்திபேறு பட்டம்: செப்டம்பர் 25, 1988
திருத்தந்தை புனிதர் 2ம் ஜான் பால்
(Pope John Paul II)

நினைவுத் திருநாள்: நவம்பர் 23

மெக்ஸிகன் இயேசுசபை கத்தோலிக்க குருவான (Mexican Jesuit Catholic priest) மிகுவேல் ப்ரோ'வின் இயற்பெயர் "ஜோஸ் ரமோன் மிகுவேல் அகஸ்டின் ப்ரோ ஜாவுரேஸ்" (José Ramón Miguel Agustín Pro Juárez) ஆகும்.

இவர், முன்னாள் மெக்ஸிகன் ஜனாதிபதி "அல்வாரோ ஒப்ரேகன்" (Álvaro Obregón) என்பவரை கொலை செய்ய முயற்சித்ததாகவும் குண்டு வெடிப்புகளில் ஈடுபட்டதாகவும் பொய்யான குற்றசாட்டுகளின்பேரில் "ப்ளுட்டர்கோ எலியாஸ் கால்ஸ்" (Plutarco Elías Calles) என்பவரது ஆட்சியில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

"கிறிஸ்டேரோ" (Cristero War) என்ற சிலுவைப் போரில் ஈடுபட்டபோது, கைது செய்யப்பட்ட இவர்மேல் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் குறைபாடுகள், சான்றுகளின்மை ஆகியன இவருக்கு முக்திபேறு பெற்றவராக அருட்பொழிவு செய்யப்பட முக்கியத்துவம் பெற்றன.

ப்ரோவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட காலத்தில், மெக்ஸிகோவில் கத்தோலிக்க மதத்தையும் அதன் குருமார்களையும் கடுமையாக எதிர்த்த ஜனாதிபதி "ப்ளுட்டர்கோ எலியாஸ் கால்ஸ்" (Plutarco Elías Calles) என்பவரது ஆட்சி நடைபெற்றது. எங்கும் எலிசபெத் மகாராணியாரின் ஆட்சி நடைபெற்றதால், கத்தோலிக்க மதம் மிகக் கடுமையான அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டது.

கி.பி. 1891ம் ஆண்டு, மெக்சிகோவின் குவாதலுபே எனுமிடத்தில் சுரங்கப் பணி செய்யும் குடும்பத்தில் பதினோரு குழந்தைகளில் மூன்றாவதாக பிறந்தவர் மிகுவேல். ஆகஸ்ட் 15, 1911ல், தமது 20வது வயதில் இயேசு சபையினரின் துறவறப் புகுநிலை சபையில் இணைந்தார்.

மெக்ஸிகோவின் நீண்டகால அதிபர் “போர்ஃபிரியோ டையஸ்” (Porfirio Díaz), கி.பி. 1911ம் ஆண்டில், ஒரு கடுமையான மறுதேர்தல் நடத்தப்பட்ட பின்னர், அதிகாரத்திற்கான போராட்டம் - மெக்சிக்கன் புரட்சி – தொடங்கியது.

கி.பி. 1914ம் ஆண்டு, கத்தோலிக்கர்களுக்கெதிரான பெரும் அலை அரசு சார்பில் எழுந்தபோது, இயேசுசபை புகுநிலை இளம் துறவியர் பயிற்சிகள் (Novitiate) கலைக்கப்பட்டு, இயேசுசபை துறவியர் அனைவரும் நாட்டைவிட்டு ஓடிச்செல்லும் சூழ்நிலை வந்தது. அவர்களில் பெரும்பாலோனோர், ஐக்கிய அமெரிக்காவின் “கலிஃபோர்னியா” மாநிலத்திலுள்ள (California) “லாஸ் கடோஸ்” (Los Gatos) எனுமிடத்திற்கு ஓடிச்சென்றனர். மெக்சிகோவில் கல்வி கற்றுக்கொண்டிருந்த ப்ரோ, வேறு வழியின்றி ஸ்பெயின் நாட்டிலுள்ள “கிரணடா” (Granada) எனுமிடத்திற்கு (கி.பி. 1915–19 காலத்தில்) கல்வி கற்க சென்றார். பின்னர், கி.பி. 1919 - 1922 காலத்தில், “நிகரகஸ்” (Nicaragua) நாட்டில் கல்வி கற்பிக்கும் பணி செய்தார்.

கி.பி. 1917ம் ஆண்டு, மெக்ஸிகோ நாட்டில் உருவாக்கப்பட்டு, அமலாக்கப்பட்ட அரசியலமைப்பு சட்டத்தின் மிக முக்கிய ஐந்து சட்டங்கள் முழுக்க முழுக்க கத்தோலிக்க திருச்சபைக்கு எதிரானதாக இருந்தன. அவற்றுள் பின்வருவன மிக முக்கியமானவை ஆகும்:

1. மதச் சார்பற்ற கல்விக்கு முக்கியத்துவம் தரப்பட்ட அதே வேளை, கத்தோலிக்க மதத்தினருக்கு ஆரம்ப மற்றும் உயர்நிலை கல்வி மறுக்கப்பட்டது. (ஷரத்து-Article 3)
2. கத்தோலிக்க சமயம் சார்ந்த துறவற சபைகள் சட்டப்படி தடை செய்யப்பட்டன. (ஷரத்து-Article 5)
3. தேவாலய கட்டிடங்களின் வெளியே பொது வழிபாடு தடை செய்யப்பட்டது. (ஷரத்து-Article 24)
4. கத்தோலிக்க அமைப்புகள் சொந்தமாக சொத்து வாங்கும் உரிமைகள் தடை செய்யப்பட்டன. (ஷரத்து-Article 27)
5. கத்தோலிக்க குருக்கள், ஆலய பேரவைக்குழு உறுப்பினர்கள், ஆலய பணியாளர்கள் ஆகியோரின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டன. கத்தோலிக்க குருக்களும் மறைப்பணியாளர்களும் தமது சீருடைகளை அணிய தடை விதிக்கப்பட்டனர். தேர்தல்களில் வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டது. பொது பிரச்சினைகள் குறித்து பொது இடங்களில் விவாதிப்பதுவும், பத்திரிக்கைகளுக்கு கருத்து தெரிவிப்பதுவும் தடை செய்யப்பட்டது. (ஷரத்து-Article 130)

கத்தோலிக்கத்துக்கெதிரான பெரும்பாலான சட்ட விதிகள், 1998ம் ஆண்டு, மெக்சிகோ அரசியலமைப்பிலிருந்து அகற்றப்பட்டன.

ப்ரோ, மேற்கு ஐரோப்பிய நாடான “பெல்ஜியத்திலுள்ள” (Belgium) “எங்கியேன் (Enghien) நகருக்கு இறையியல் கற்க அனுப்பப்பட்டார். அங்கே, அவருடைய உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்தது. இறையியல் கல்வியை பூர்த்தி செய்த மிகுவேல் ப்ரோ, கி.பி. 1925ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், 31ம் நாள், குருத்துவ அருட்பொழிவு செய்யப்பட்டார். குருத்துவம் பெற்ற மூன்று மாத காலத்துக்குள்ளேயே, அவருடைய வயிற்றுப்புண் நோய்க்காக பல்வேறு தீவிர அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இருப்பினும் அவர் மகிழ்ச்சியாகவும் தைரியமாகவும் இருந்தார். தமது மகிழ்ச்சிக்குக் காரணம், ஜெபம் மட்டுமே என்பார்.

ஐரோப்பாவில் தமது அனைத்து பயிற்சிகளையும் முடித்த ப்ரோ, கி.பி. 1926ம் ஆண்டு மெக்சிகோ திரும்பினார். வழியில், தென்மேற்கு ஃபிரான்சிலுள்ள சிறிய வியாபார நகரான “லூர்து” (Lourdes) சென்றார். லூர்து அன்னையின் (Our Lady of Lourdes) கெபியை தரிசித்து திருப்பலி நிறைவேற்றினார்.

கி.பி. 1926ம் ஆண்டு, ஜூலை மாதம், 8ம் தேதி, ப்ரோ மெக்சிகோ சென்றடைந்தபோது, அங்கே "ப்ளுட்டர்கோ எலியாஸ் கால்ஸ்" (Plutarco Elías Calles) ஜனாதிபதியாக இருந்தார். இவரே, கத்தோலிக்கர்களுக்கெதிரான சட்டங்களை தீவிரமாக நிறைவேற்றியவர்.

கி.பி. 1920களில் கத்தோலிக்கத் திருஅவைக்கு எதிராக மெக்சிகோ நாட்டில் உருவான அடக்குமுறை அரசை எதிர்த்துப் போராடியவர்கள், "கிறிஸ்து அரசர் பல்லாண்டு வாழ்க!" என்ற விருதுவாக்குடன் போராடிவந்தனர். இந்தப் போராட்டக் குழுவினர், "கிறிஸ்டேரோஸ்" (Cristeros) என்று அழைக்கப்பட்டனர். ப்ரோ, "கிறிஸ்டேரோஸ்" (Cristeros) குழுவில் இணைந்து, மிகுந்த துணிவுடனும், நுண்மதியுடனும் மக்களுக்குத் தேவையான அருட்பணிகள் பலவற்றை ஆற்றிவந்தார்.

கி.பி. 1927ம் ஆண்டு, நவம்பர் மாதம், 23ம் தேதி, மெக்ஸிகோ நாட்டில் இந்த இளம் இயேசு சபை அருட்பணியாளருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. அதுவும், ஒரு பொதுவான இடத்தில், காவல் துறையினரால் அவர் சுட்டுக் கொல்லப்படவேண்டும் என்று மெக்சிகோ அரசுத் தலைவர் "ப்ளுட்டர்கோ எலியாஸ் கால்ஸ்" (Plutarco Elías Calles) ஆணையிட்டார். காவல் துறையினர் அவரைச் சுடுவதற்கு துப்பாக்கிகளை உயர்த்தியதும், இந்த இளம் குரு அச்சமுற்று, தன் கிறிஸ்தவ நம்பிக்கையை கைவிட்டு, மன்னிப்பு கேட்பார் என்று அரசுத் தலைவர் எதிர்பார்த்தார். இளம் குரு மன்னிப்பு வேண்டுவதை பத்திரிகையாளர்கள் காணவேண்டும் என்று எண்ணி, மரணதண்டனை நிறைவேற்றும் இடத்திற்கு அவர்களை அரசுத்தலைவர் அழைத்திருந்தார்.

இளம் குருவை ஒரு சுவரருகே நிறுத்தினர் காவல் துறையினர். அவருடைய இறுதி ஆவல் என்ன என்று கேட்ட காவல் துறை அதிகாரியிடம், தான் சிறிது நேரம் செபிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதன்படி, அவ்விடத்திலேயே முழந்தாள் படியிட்டு செபித்தார். தான் கொண்டுவந்திருந்த சிலுவையை எடுத்து, ஆழ்ந்த அன்புடன் அதை முத்தமிட்டார். பின்னர், அந்தச் சிலுவையைத் தன் வலது கரத்திலும், செபமாலையை இடது கரத்திலும் ஏந்தியபடி, இரு கரங்களையும் விரித்து நின்று, "கிறிஸ்து அரசர் என்றென்றும் வாழ்க!" என்று உரத்த குரலில் முழங்கினார். அந்நேரம், காவல் துறையினரின் குண்டுகள் அவர் மீது பாய 36 வயது நிறைந்த அந்த இளம் இயேசுசபை அருட்பணியாளர் மிகுவேல் அகஸ்டின் ப்ரோ தம் உயிரை கிறிஸ்து அரசர் பாதங்களில் அர்ப்பணம் செய்தார்.

கிறிஸ்து அரசரின் பெயரைச் சொல்லியபடி, தன் 36வது வயதில் இளம் இயேசு சபை அருட்பணியாளர் மிகுவேல், ஒரு மறைசாட்சியாக உயிர் துறந்தார். மிகுவேல் ப்ரோ அவர்களின் மரணம் பல கோணங்களில் புகைப்படங்களாய் எடுக்கப்பட்டன. அவற்றை, அடுத்த நாள் அனைத்து நாளிதழ்களிலும் முதல் பக்கத்தில் அச்சிட அரசுத்தலைவர் கட்டளையிட்டார். மிகுவேல் அவர்களின் கோரமான மரணத்தைக் காணும் "கிறிஸ்டேரோஸ்" குழுவினர், தங்கள் போராட்டத்தைக் கைவிடுவர் என்று அரசுத் தலைவர் எண்ணினார். ஆனால், மிகுவேல் அவர்களின் வீர மரணத்திற்குப் பிறகு, போராட்டம் இன்னும் வலுவடைந்தது. அவர்களில் பலர் தங்கள் மரண தண்டனையை எதிர்கொள்ளும்போது, மிகுவேல் ப்ரோ அவர்களின் மரணம் அச்சிடப்பட்ட செய்தித்தாள் படங்களைத் தாங்கியபடி உயிர் துறந்தனர்.

கி.பி. 1988ம் ஆண்டு, திருத்தந்தை புனிதர் 2ம் ஜான்பால் அவர்கள், மறைசாட்சியாக உயிர் துறந்த மிகுவேல் ப்ரோ அவர்களை, முக்திபேறு பெற்றவராக அறிவித்தார்.

No comments:

Post a Comment