Monday, November 18, 2019

† தூய பேதுரு மற்றும் பவுல் பேராலய அபிசேகம் † (நவம்பர் 18)


† இன்றைய திருவிழா †
(நவம்பர் 18)

✠ தூய பேதுரு மற்றும் பவுல் பேராலய அபிசேகம் ✠
(Dedication of the Basilicas of the Apostles Saints Peter and Paul)

திருவிழா நாள்: நவம்பர் 18

தூய பேதுரு மற்றும் பவுல் பேராலய அபிஷேக திருவிழா, ரோம் நகரிலுள்ள நான்கு முக்கிய பேராலயங்களில் இரண்டு பேராலயங்களின் அபிஷேக விஷாவைக் கொண்டாடுகிறது.

“தூய மரியாள் மேஜர் பேராலய” (Basilica of St Mary Major’s) அபிஷேகம் ஆகஸ்ட் மாதம் 5ம் தேதியும், “தூய யோவான் இலாத்தரன் பேராலய” (Basilica of St. John Lateran’s) அபிஷேகம், நவம்பர் மாதம் 9ம் தேதியும் கொண்டாடப்படுகின்றது.

தூய பேதுரு பேராலயம், முதன்முதலில், பேரரசர் “கான்ஸ்டன்டைன்” (Emperor Constantine) அவர்களால், கி.பி. 323ம் ஆண்டில் கட்டப்பட்டது. இப்பேராலயமானது, “வாட்டிகன் மலையின்” (Vatican Hill) மீதுள்ள கத்தோலிக்க திருச்சபையின் முதல் திருத்தந்தையும், அப்போஸ்தலருமான பேதுருவின் கல்லறையின் மீது கட்டப்பட்டுள்ளது. தென்கிழக்கு ஃபிரான்சின் “ரோன்” (Rhône River) நதியோரமுள்ள “அவிக்னான்” (Avignon) நகரிலிருந்து திருத்தந்தையர் திரும்பிய பின்னரே திருத்தந்தையர் இங்கே வசிக்க தொடங்கினர். ஆயிரம் வருடங்களுக்கு மேலாக நின்ற ஆரம்பகால கட்டிடத்தை கட்டுமானப் பிரச்சினைகள் காரணமாக இடிக்குமாறு, திருத்தந்தை “இரண்டாம் ஜூலியஸ்” (Pope Julius II) 1506ம் ஆண்டு கட்டளையிட்டார். புதிய பேராலய கட்டிட பணிகள் நிறைவடைய 120 வருடங்களுக்கும் மேலானது. திருத்தந்தை “எட்டாம் அர்பன்” (Pope Urban VIII) அவர்களால், கி.பி. 1626ம் ஆண்டு, நவம்பர் மாதம், 18ம் தேதி, இப்பேராலயம் அர்ப்பணிக்கப்பட்டது. இது, கிறிஸ்தவ சமூகத்தின் மிகவும் பிரபலமான பேராலயமாகக் கருதப்படுகிறது.

தூய பவுல் பேராலயம், ரோம் நகரின் அசல் சுவர்களின் வெளியே சுமார் பன்னிரண்டு கிலோமீட்டர் தூரத்தில், தூய பவுல் மறைசாட்சியாக மரித்த இடம் என்று கூறப்படும் இடத்தில் அமைந்துள்ளது. இப்பேராலயமும் பேரரசர் “கான்ஸ்டன்டைன்” (Emperor Constantine) அவர்களால் கட்டப்பட்டதெனினும், “ரோமப் பேரரசின் 69ம் பேரரசர்” (69th Emperor of the Roman Empire), “முதலாம் தியோடோசியஸ்” (Theodosius I) மற்றும் திருத்தந்தை “முதலாம் லியோ” (Pope St Leo the Great) ஆகியோரால் விரிவாக்கம் செய்யப்பட்டது.

கி.பி. 1823ம் ஆண்டில் நடந்த ஒரு தீ விபத்தில் முற்றிலும் அழிந்துபோனது. உலகெங்கிலும் இருந்து வந்த நன்கொடைகள் மூலம், இப்பேராலயத்தின் மறுசீரமைப்பு சாத்தியமானது. தூய பேதுரு பேராலய கட்டிட பணிகள் முடியுமுன்னர், தூய பவுலின் பேராலாயம்தான் ரோம் நகரில் பெரிய பேராலயமாக இருந்தது. இப்பேராலயமானது, தூய பவுலின் கல்லறையின்மேல் கட்டப்பட்டுள்ளது. திருத்தந்தை “ஒன்பதாம் பயஸ்” (Pope Pius IX), இப்பேராலயத்தை கி.பி. 1854ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 10ம் தேதி, அபிஷேகம் செய்வித்தார்.

இவ்விரண்டு பேராலயங்களும் பல்லாயிரக்கணக்கான கத்தோலிக்க கிறிஸ்தவ திருயாத்திரிகர்களை ஆண்டுதோறும் ஈர்க்கின்றன. எண்ணற்ற பிற சபை/ சமயத்தினரும் ஆண்டுதோறும் வருகை புரிகின்றனர்.

நாம் அனைவரும் நமது உள்ளூர் தேவாலயங்களின் உறுப்பினர்கள் ஆவோம். ஆனால், உலக திருச்சபையின் அடையாள சின்னமான, ரோம் நகரிலுள்ள தாய்த் திருச்சபை பேராலயங்களினதும் உறுப்பினர் ஆவோம்.

No comments:

Post a Comment