Friday, November 15, 2019

† புனிதர் ஆல்பர்டஸ் மேக்னஸ் † (நவம்பர் 15)


† இன்றைய புனிதர் †
(நவம்பர் 15)

✠ புனிதர் ஆல்பர்டஸ் மேக்னஸ் ✠
(St. Albertus Magnus)

ஆயர், மறைவல்லுநர்:
(Bishop, and Doctor of the Church)

பிறப்பு: கி.பி. 1193
லாவீஞ்சன், பவேரியா
(Lauingen, Duchy of Bavaria)

இறப்பு: நவம்பர் 15, 1280
கொலோன், தூய ரோமப் பேரரசு
(Cologne, Holy Roman Empire)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

அருளாளர் பட்டம்: கி.பி. 1622
திருத்தந்தை பதினைந்தாம் கிரகோரி 
(Pope Gregory XV)

புனிதர் பட்டம்: கி.பி. 1931 
திருத்தந்தை பதினொன்றாம் பயஸ்
(Pope Pius XI)

முக்கிய திருத்தலங்கள்: 
புனித ஆண்ட்ரூஸ் தேவாலயம், கொலோன், ஜெர்மனி
(St. Andrew's Church, Cologne, Germany)

நினைவுத் திருவிழா: நவம்பர் 15

பாதுகாவல்: 
சின்சினாட்டி (Cincinnati), ஓஹியோ (Ohio), உலக இளையோர் நாள், இயற்கை அறிவியல், மருத்துவ தொழில்நுட்ப வல்லுனர்கள், தத்துவ ஞானிகள், விஞ்ஞானிகள், மாணவர்கள்

“புனிதர் பெரிய ஆல்பர்ட்” (Saint Albert the Great) என்றும், “புனிதர் ஆல்பர்டஸ் மேக்னஸ்” (St. Albertus Magnus) என்றும், “புனிதர் கொலோனின் ஆல்பெர்ட்” (St. Albert of Cologne) என்றும் அழைக்கப்படும் இவர், ஒரு கத்தோலிக்க புனிதர் ஆவார். இவர் “ஜெர்மனிய டொமினிக்கன் சபைத் துறவியும்” (German Dominican friar) ஆயரும் ஆவார். இவர் தம் வாழ்நாளில் 'அகற்பொது முனைவர்' என்றும் 'புலவாண்மை முனைவர்' என்றும் பாராட்டப்பட்டவர். வாழ்நாள் இறுதியில் தன்பெயருக்கு முன் புனித என்பது மட்டுமன்றி பெரியவர் என்ற பெருமையையும் பெற்றவர்.

“ஜேம்ஸ் ஏ. வீஷிபிள்” (James A. Weisheipl) மற்றும் “ஜோச்சிம் ஆர்.சோடர்” (Joachim R. Söder) போன்ற அறிஞர்கள், இவரை ஜெர்மனியின் “மத்தியகாலத்தின்” (Middle Ages) மாபெரும் தத்துவஞானியாகவும், இறையியலாளராகவும் புகழ்கின்றனர். கத்தோலிக்கத் திருச்சபை இவரை “திருச்சபை (மறையியல்) முனைவராக” தகைமையீந்து பெருமதிப்பு தந்தது. இதுபோல திருச்சபையின் தகைமை பெற்றவர் 36 பேரே என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

உலக அளவில் மாபெரும் மேதையாக அறியப்பட்ட இவரின் ஆர்வம் அறிவியல், மெய்யியல், இறையியல் என பரந்து விரிந்ததாய் இருந்தது. “ஆர்சனிக்” (Arsenic) என்ற இரசாயன தனிமத்தை கண்டுபிடித்தவர் இவரேயாவார். அத்துடன் “சில்வர் நைட்ரேட்” (Silver nitrate) உள்ளிட்ட ஒளியுணர் கனிம கலவையையும் ஆராய்ந்தவர் இவரே.

கிறிஸ்தவ நம்பிக்கை பகுத்தறிவுக்கு எதிரானது அல்ல என்றும், இவ்வுலகப் படைப்பானது, இறைவனால் எழுதப்பட்ட ஒரு புத்தகமாக நோக்கப்பட்டு, வெவ்வேறு அறிவியல்களால் அதனதன் வகையில் வாசிக்கப்பட்டு புரிந்துகொள்ளப்பட முடியும் என்பதனை இப்புனிதர் வெளிப்படுத்துகிறார். அரிஸ்டாட்டில் குறித்த இப்புனிதரின் எழுத்துக்கள் மெய்யியல் மற்றும் இறையியல் எனும் அறிவியல்களுக்கிடையேயான வேறுபாடுகளைக் காட்டுகின்றது.

வாழ்க்கை வரலாறு:
ஆல்பெர்ட், கி.பி. 1280ம் ஆண்டில் மரித்தபோது இவருக்கு 80 வயது எனக் கூறப்படுவதால், இவர் கி.பி. 1200க்கு முன்பே பிறந்துள்ளார். ஒன்றுக்கும் மேற்பட்ட தக்க சான்றுகளின்படி, இறக்கும்போது 87 வயது முடிந்திருந்ததாக அறியப்படுவதால், இவர் கி.பி. 1193ல் பிறந்ததாகப் பொதுவாக ஏற்கப்படுகிறது. ஆல்பெர்ட், (தற்போது, “பவரியா” (Bavaria) எனப்படும்) “லாவீஞ்சனில்” (Lauingen) பிறந்திருக்கலாம். ஏனெனில் இவர் தன்னை “லாவீஞ்சனின்” ஆல்பெர்ட் என அழைத்துக்கொண்டார். அல்லது அது வெறுமனே அவர் குடும்பப் பெயராகவும் இருக்கலாம்.

ஆல்பர்ட், பெரும்பாலும் “பதுவை” (University of Padua) பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றார். “ருடொல்ஃப் டி நொவமகியா” (Rudolph de Novamagia) எனும் சரித்திர ஆசிரியரின் கூற்றின்படி, பிற்காலத்தில், ஆல்பர்ட்டுக்கு அர்ச்சிஷ்ட கன்னி மரியாள் திருக்காட்சியளித்ததாக கூறப்படுகிறது. அன்னையின் உந்துதல் மற்றும் திருவுளப்படி, ஆல்பர்ட், கி.பி. 1223 அல்லது 1229ம் ஆண்டில் டொமினிக்கன் (Dominican Order) சபையின் உறுப்பினராகி, “போலோக்னா” (Bologna) மற்றும் பிற இடங்களில் இறையியல் கற்றார்.

இறையியலில் மாபெரும் தேர்ச்சி பெற்ற இவர், பாரீசில் தன் படிப்பை முடித்தபின் “கொலோனில்” (Cologne) கல்வி கற்பிக்கும் பணியைத் துவக்கினார். இவர், கற்பிப்பதற்கும் எழுதுவதற்கும் என திரும்பினார். இவர், “ரீகன்ஸ்பர்க்” (Regensburg), “ஃப்ரேய்பர்க்” (Freiburg), “ஸ்ட்ராஸ்பௌர்க்” (Strasbourg) மற்றும் “ஹில்ட்ஷெய்ம்” (Hildesheim) ஆகிய இடங்களிலுள்ள பல பல்கலை கழகங்களில் இறையியல் பேராசிரியராக பணிபுரிந்தார். இவரது வகுப்புகள் மிகவும் சிறந்த முறையில் இருந்ததால், மிக அதிகமான எண்ணிக்கையில் மாணவர்கள் இவரது வகுப்புகளுக்கு வந்தனர். இதனால், இவரது பாடங்களை வகுப்புகளில் நடத்த முடியாமல், திறந்த வெளிகளில் நடத்தினார்.

கி.பி. 1254ம் ஆண்டு, ஆல்பர்ட் டொமினிக்கன் சபையின் தலைவராக நியமிக்கப்பட்டார். பெரும் கவனிப்பு மற்றும் செயல்திறனுடன் அலுவலக கடமைகளை நிறைவேற்றினார்.

கி.பி. 1260ம் ஆண்டில், திருத்தந்தை “நான்காம் அலெக்சாண்டர்” (Pope Alexander IV) இவரை ஜெர்மனியின் “பவரியாவிலுள்ள” (Bavaria) “ரீகன்ஸ்பர்க்” (Regensburg) ஆயராக நியமித்தார். மூன்று வருடங்களின் பின்னர், அவர் அந்த பதவியிலிருந்து விலகினார். 1263ம் ஆண்டு, இவரை ஆயர் பதவியிலிருந்து விலக அனுமதித்த திருத்தந்தை “நான்காம் அர்பன்” (Pope Urban IV), இவரை ஜெர்மன் மொழி பேசும் நாடுகளில் “எட்டாவது சிலுவைப் போரை” (Eighth Crusade) போதிக்குமாறு கூறினார்.

கி.பி. 1278ம் ஆண்டு, இவரது உடல் ஆரோக்கியம் சீர்குலைந்து போன பிறகு, கி.பி. 1280ம் ஆண்டு, நவம்பர் மாதம், 15ம் நாள், ஆல்பர்ட், மரித்துப்போனார்.

கி.பி. 1931ம் ஆண்டு, திருத்தந்தை பதினொன்றாம் பயஸ் (Pope Pius XI), இவரை புனிதராகவும், மறைவல்லுனராகவும் உயர்த்தினார். 1941ம் ஆண்டு, திருத்தந்தை “பன்னிரண்டாம் பயஸ்” (Pope Pius XII), இவரை இயற்கை சார்ந்த அறிவியல் விஞ்ஞானிகளின் பாதுகாவலராக அறிவித்தார்.

No comments:

Post a Comment