Tuesday, October 15, 2019

† புனிதர் தெக்லா † (அக்டோபர் 15)


இன்றைய புனிதர்
(அக்டோபர் 15)


புனிதர் தெக்லா
(St. Thecla of Kitzingen)

பெனடிக்டைன் கன்னியாஸ்திரி/ மடாதிபதி:
(Benedictine nun/ Abbess)

பிறப்பு: ---
இங்கிலாந்து, தென் பிரிட்டன்
(England, Southern Britain)

இறப்பு: கி.பி. 790
ஜெர்மனி (Germany)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

நினைவுத் திருநாள்: அக்டோபர் 15

புனிதர் தெக்லா, ஒரு பெனடிக்டைன் கன்னியாஸ்திரியும், மடாதிபதியும் ஆவார். தென் பிரிட்டனின் இங்கிலாந்து நாட்டில் பிறந்த இவர், புனிதர் போனிஃபேசுக்கு (Saint Boniface), அவரது மிஷனரி உழைப்புகளில் உதவுவதற்காக ஜெர்மனி நாட்டுக்குச் சென்றார்.

பின்னணி :
நார்தும்ப்ரியா அரசனான “அல்ட்ஃபிரித்” (Aldfrith of Northumbria), மரித்த சிறிது காலத்தின் பின்னர், கி.பி. சற்றேறக்குறைய 705ம் ஆண்டு, அவரது மனைவியும், “வெஸ்செக்ஸ்” அரசனான “இனே” (King Ine of Wessex) என்பவரின் சகோதரியுமான “கத்பர்த்” (Cuthburh) என்பவர், தமது சகோதரரின் இராச்சியத்தில், தென்மேற்கு இங்கிலாந்தின் “டோர்ச்செஸ்டர்” (Dorchester) நகரிலுள்ள “விம்போர்ன்” (Wimborne) எனுமிடத்தில் ஒரு இரட்டை துறவு மடம் அமைத்தார். “தூய ரிச்சர்ட்” (St. Richard of Wessex) என்பவர், “வெஸ்ட் சாக்சன்ஸ்” (West Saxons) பேரரசர்களின் கீழேயிருந்த குட்டி அரசர்களுள் ஒருவரும், புனிதர் போனிஃபேசின் (Saint Boniface) சகோதரியான “வின்னா” (Winna) என்பவரை மணமுடித்தவருமாவார். ரிச்சர்ட், தமது இரண்டு மகன்களுடன் புனித பூமிக்கு திருயாத்திரை புறப்படுவதற்கு முன்னர், தனது பதினொரு வயதான மகள் வல்பூர்காவை” (Walpurga) விம்போர்ன் மடாதிபதியிடம்” (Abbess of Wimborne) ஒப்படைத்தார்.

விம்போர்ன்” மடத்தின் அருட்சகோதரியரிடம் கல்வி கற்ற வல்பூர்கா, பின்னாளில் அதே சமூகத்தின் உறுப்பினர் ஆனார். போனிஃபேஸ், விம்போர்ன் சமூகத்துடன் அடிக்கடி தொடர்புகொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

வாழ்க்கை :
தென் பிரிட்டனில் பிறந்த தெக்லா, தூய லியோபாவின் (Saint Lioba) உறவினர் ஆவார். விம்போர்ன் மடத்தில் கல்வி கற்ற தெக்லாவும் லியோபாவும், பின்னாளில் அங்கேயே உள்ள பெனடிக்டைன் சமூகத்தில் (Benedictine community) இணைந்தனர். போனிஃபேஸ், விம்போர்ன் மடத்தின் மடாதிபதி “டெட்டா” (Tetta) என்பவருக்கு கடிதம் எழுதும்போது, ஜெர்மனியில் தமது மிஷனரி பணிகளில் உதவிகள் செய்வதற்கு ஆட்கள் வேண்டுமென கேட்டிருந்தார். ஆகவே, தெக்லாவும் லியோபாவும் அங்கனமே ஜெர்மனிக்கு அனுப்பப்பட்டார்கள். இந்த ஆங்கிலோ-சாக்சன் பெண் துறவியர்களை அவரது உதவியாளர்களாக வரவழைப்பதற்காக பொனிஃபேஸ் மூன்று நோக்கங்களைக் கொண்டிருந்ததாக தெரிகிறது:
பெனடிக்டைன் சட்டதிட்டங்களை முழுமையாக கடைபிடிக்க புதிய அடித்தளங்கள் மூலம் பரவச் செய்தல்.
ஏற்கனவே நிறுவப்பட்ட மடாலயங்களில் இதனை அறிமுகப்படுத்துதல்.
கடைபிடித்தல்களை பிறரில் முன்னிலைப் படுத்துதல்.
இறுதியாக, உள்ளூர் மக்களின் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட கல்வி மூலம் தமது சாந்தமான செல்வாக்கினை அவர்களிடையே பரவச் செய்தல்.

கி.பி. 748ம் ஆண்டு, “பிஸ்சோஃப்செய்ம்” (Bischofsheim) நகருக்கு அவர்கள் வந்து சேர்ந்தனர். அங்கே, போனிஃபேஸ் ஒரு பள்ளியை நிறுவினார். அதன் மடாதிபதியாக லியோபா நியமனம் பெற்றார். பின்னர், “ஒச்சென்ஃபர்ட்” (Ochsenfurt) நகரின் மடத்தின் மடாதிபதியாக தெக்லா நியமிக்கப்பட்டார். கி.பி. 750ம் ஆண்டின் பிறகு, “கிட்ஸின்ஜென்” (Kitzingen) நகரின் பிரதான மடத்தின் முதல் மடாதிபதியான “ஹடேலோங்கா” (Hadelonga) என்பவர் மரித்ததும், தெக்லா அந்த மடத்தையும் மேற்பார்வை செய்ய அழைக்கப்பட்டார்.

No comments:

Post a Comment